Tuesday, August 30, 2011

“பேராசிரியர் கைலாசபதி: சமூகமாற்றத்திற்கான இயங்காற்றல்” என்ற நூல் பற்றி சில குறிப்புகள்:நந்தினி சேவியர்

ஆசிரியர்: லெனின் மதிவானம்
வெளியிடு: குமரன் புத்தக இல்லம்
அறுபதுகள் தொடங்கி  இன்று வரையில் ஆயிரக் கணக்கான கவிஞர்களும் சிறுகதை எழுத்தாளர்களும் நூற்றுக்கணக்கான நாவலாசிரியர்களும் தோன்றியுள்ள நமது நாட்டின் இலக்கிய சூழலில் விமர்சகர்களின் எண்ணிக்கையானது கைவிரல்களுக்குள் அடக்கிவிடக் கூடியதாகவே உள்ளது. இங்கே விமர்சனம் என நான் குறிப்பிடுவது ரசிகமணித்தனமான சிலாகிப்புகளையோ, நயவுரைகளையோ, சம்பூரண நிராகரிப்புகளையோ, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளையோ அல்ல என்பதைக் கவனத்தில் கொள்க.
மக்கள் மட்டுமே உலக வரலாற்றை ஆக்குவதிலான உந்து சக்தியாவர் கூற்றுக்கமைய படைப்போகும், அப்படி படைப்போரை, உத்வேகத்துடன் படைக்கத்தூண்டும் விமசகர்களின் முன்னோடியாக, பேராசியர் க. கைலாசபதி அவர்களையே நாம் பெருமையுடன் நினைவு கூருகின்றோம்.
மக்கள் நலம் சார்ந்து எழுதுவோரும் சிந்திப்போரும் இந்தப் பூமிப் பந்தின் எந்த மூலையில் இருந்தாலும் முகமறியாத அந்த மனிதர்கள் எனது சொந்தக்காரர்களே.
தோழர்கள் காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாஓ சேகுவேரா முதல் படைப்பாளிகளான மாக்ஸிம் கோர்க்கி, மாயாகோவ்ஸ்கி லூசூன், ஹோ சி மின், பாப்புலோ நெருடா, இந்தியாவில்; பாரதி வைக்கம் முகம்மது பஸீர், திகம்பர கவிகள் இன்னும் இன்னும் நான் அறிமுகம் கொள்ளாத எண்ணிறைந்த படைப்பாளிகளும், விமர்சகர்களும் எனது உறவுகளும் நம்பிக்கைகளுமே ஆவார்.
இப்படித்தான் 2000ஆம் ஆண்டுகளில் தோழர் லெனின் மதிவானம் எனக்கு தனது எழுத்தின் மூலம் அறிமுகமாகினார். லெனின் என்னும் பெயரின் ஆகர்ஸத்துடன் அவரை நான் வாசிக்க முனைந்தேன். எனக்கு நம்பிக்கையூட்டும் பல செய்திகளை அவரது எழுத்துக்கள் எனக்கு நல்கின.
தோழமை விமர்சனத்தின் தாத்பரியத்தை பேராசிரியர் க. கைலாசபதியிக்கு பின் அவரிடம் நான் கண்டேன். ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட இலக்கிய, அரசியலை அவர் சார்ந்திருப்தை என்னால் அறிய முடிந்தது. அதன் தேவையை வலியுறுத்தும் அவரை முன்னர் நான் குறிப்பிட்ட உறவுகளில் ஒன்றாக அடையாளம் கண்டேன். சமீபத்திலேயே அவரை நேரில் காணக்கிடைத்தது.
விமர்சன மூர்க்கத் தனத்தையும், வக்கிரத்தையும், இலக்கியக் கொமிசார் தனத்தையும் அவரிடம் என்னால் காணமுடியவில்லை. விமர்சனம், சுயவிமர்சனம் என்பதை அவர் ஏற்றுக் கொண்டவராக இருக்கிறார்.
அவரது எழுத்துக்களில் எளிமைத்தன்மை கூடியிருக்கிறது. பேராசிரியர் கைலாசபதி பற்றிய அவரது விமர்சனங்களும் மற்றும் பல்துறை சார்ந்த கட்டுரைகளும,; பேச்சுகளும் விதந்துரைக்கும்படி அமைந்துள்ளன.
என் போன்ற வாசகர்களுக்கு அவரது விமர்சன எழுத்துகள் உற்சாகமூட்டுகின்றது. தொடர்ந்தும் அவர் எமக்காக இன்னும் எழுதவேண்டும்

No comments:

Post a Comment