Wednesday, September 1, 2010

சி. வி. என்றொரு படைப்பாளி



மலையக இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க ஆளுமைச் சுவடுகளை பதித்தவர் சி.வி வேலுப்பிள்ளை. மலையக மக்களின் வாழ்வியலை உணர்ந்து அதன் உள்நின்று இலக்கியம் படைத்தவர்களில் இவருக்கு தனியிடமுண்டு. தொழிற் சங்கவாதி, அரசியல்வாதி, பத்திரிக்கையாளர், கவிஞர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், நாட்டார் பாடல் சேகரிப்பாளர், கட்டுரையாளர் என பல்துறைசார்ந்த ஆளுமைகளைக் கொண்டவர்.




சி.வி. வேலுப்பிள்ளையின் படைப்புகளில் In Ceylon Tea Garden என்ற கவிதைத் தொகுப்பும் Born to Labour என்ற விவரண தொகுப்பும் முக்கியமானவையாகும். சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் கடைசிவரை தமிழில் கவிதை எழுதவில்லை. அவரது ஆங்கில கவி வரிகள் இவ்வாறு பிரவாகம் கொண்டிருந்தன.



“To the tom - toms throp

The clawn lies startled

Trembling upon the tea

The last dew bead is fresh

Before the moring treads

On this mating hour

Where suffering and pain

Decay and death are one

In the breathing of men”



இக்கவிதை தொகுப்பினை சக்தி .பாலையா ~~இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே

என மொழிபெயர்ப்பு செய்திருந்தார். இம்மொழிப்பெயர்ப்பில் சி.வி.யின் கவிதைகளில் காணப்பட்ட இயல்பான மண்வாசைன பண்பும் அவற்றோடு இணைந்த சொற்களும் காணப்படவில்லை. சத்தி .பாலையாவின் கவிதை தொகுப்பினை மொழிபெயரப்;பு தொகுப்பு எனக்கூறுவதை விட தழுவல் எனக் கூறுவதே பொருந்தும்.சி.வி அவர்கள் அரசியல் வாதியாக தொழிற்சங்கவாதியாக இருந்தவர். இலக்கிய தளத்தில் இயங்கிய சக்தி பாலையா இத்தகைய உணர்வுகளை எவ்வாறு எதிர் கொண்டார் என்பதும் சுவாரசியமானதோர் வினாதான். நந்தலாலா சஞ்சிகை குழுவினரும் சி. வியின் கவிதை மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அம் மொழிப்பெயர்ப்பு வரிகள் பின்வருமாறு அமைந்துக் காணப்படுகின்றது.



“பிரட்டின் அதிர்வில்

விடியலே அதிர்ந்துப்போய்

தேயிலை மீது

சரிந்து கிடந்தது

விடியல் பொழுதின்

ஆக்கிரமிப்பின் முன்னர்

இறுதியாய் சொட்டும் - இப்

பனித்துளி புதிது.

பொருந்தும் இந்த

பொழுதின் கணத்தில் தான்

துயரும் நோவும்

நசிவும் இழப்பும்

இம் மக்களின் மூச்சில்

இவ்வாழ்கையின் முகிழ்ப்பின்

அம்சம் ஒன்றென

ஆகிப் போயின”



இம்மொழிபெயரப்;பு உள்ளடகத்திலும் உருவகத்திலும் சிதைவடையாது காணப்படுகின்றது. முல்லியப்பு சந்தி திலகர் தொகுத்து வெயிட்டுள்ள சி. வி. யின் In Ceylon Tea Garden கவிதை தொகுப்பு (ஆங்கிலத்தில் சி.வி. எழுதிய ஆங்கில கவிதைகளையும் மொழிப்பெயர்ப்பையும் சேர்த்து) இத்தகைய ஆய்வுகளுக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.



சி.வி.யின் படைப்புகள் மலையக மக்களின் பிரச்சினைளை உள்நின்று நோக்குவதுடன், மலையக வாழ்க்கை முறையின் நடப்பியலை, புரிந்து கொண்டு நியாயத்தின் பக்கம் நின்று சிறுகதை எழுத முனைந்தவர் அவர். பெரும்பாலும் இவரது சிறுகதைகள் நாட்டார் இலக்கியத்தின் இன்னோரு வடிவாக அமைந்துக் காணப்படுகின்றது.



சி.வி.யின்; படைப்புகளுக்கு களம் அமைத்து (குறிப்பாக தினகரன் பத்திரிகையில்) கொடுத்ததுடன் ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் பேராசிரியர் கைலாசபதி. ~~அரசியல் அநாதைகளாய் புழுங்கிக் கொண்டிருந்த எங்களை உள்ளங்கனிந்து அன்புடன் நேசித்தவர் கைலாஸ். எங்கள் பெருமகன் அவர்

என சி.வி வேலுப்பிள்ளை அவர்கள் கைலாசபதியின் அஞ்சலி உரையில் கூறியுள்ளமை இவ்விடத்தில் நினைவு கூறத்தக்கதொன்றாகும்.



இக்காலப்பகுதியில் இவ்வெழுத்தாளர்களின் சிந்தனைகள் பற்றி அறிய அக்காலச் சூழலில் முனைப்புற்றிருந்த தேசிய சர்வதேச சமூக அரசியல் கலாசாரம் குறித்து தெளிவு இன்றியமையாததாகும். 1960களில் இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியிலே இடதுசாரி இயக்கங்கள் வளர்ச்சியடைந்திருந்ததுடன் அவை பரந்துபட்ட உழைக்கும் மக்களை நோக்கி படர்ந்தது. இந்த பிரஞ்சையின் வெளிப்பாடாகவே தேசிய இலக்கிய இயக்கம் தோற்றம் பெற்று தத்துவார்த்த போராட்டங்கள் முன்னேடுக்கப்பட்டன. ~~தேசியம்

என்ற பதத்தினை மேலோட்டமாக அர்த்தப்படுத்தி பார்க்கும் போது அது குறுகிய பிரதேச வாதமாகப்படலாம். ஆனால் சற்று ஆழமாக நோக்கினால் பிரதேசங்களினதும், தேசிய சிறுபான்மையினரதும் அடக்கி ஒடுக்கப்படும் வர்க்கங்களினதும் எழுச்சியை அது பிரதிப்பலித்து நிற்க்கின்றது என்பதை அறியலாம். தேசிய இலக்கியம் பற்றி பேராசிரியர் கைலாசபதி; ~~குறிப்பிட்ட காலத்தில் காணப்படும் சமூக அமைப்பை அப்படியே பாதுகாக்கவோ, மாற்றியமைக்கவோ, சீர்திருத்தவோ இடமுண்டு. ஏனெனில் வெறுமனே ஒரு நாட்டை பிரதிபலிப்பது தேசிய இலக்கியமாகாது. தேசிய இலக்கியம் என நாம் கூறும் போது இலக்கியம் படைப்பவர்கள் இலட்சியம் நோக்கம் முதலியவற்றையும் சேர்த்தே எடை போடுகின்றது. சுருக்கக்கூறின் தேசிய இலக்கியம் என்பது ஒருவித போராட்ட இலக்கியமாகும்

என அடையாளப்படுத்தியிருக்கின்றார்.



இக்காலச்சூழலில் எழுந்த தேசிய இலக்கிய பண்பை நாம் சி.வி.யின் படைப்புகளில் காணக்கூடியதாய் உள்ளன. இவ்வாறான சூழலில் இலக்கியம் படைத்த சி.வி.யின் படைப்புக்கள் தம் காலகட்டத்து எழுச்சிகளையும் போராட்டங்களையும் இயக்கங்களையும் பொருளாகக் கொள்ளவில்லை என்பது ஆய்வு நிலைப்பட்ட உண்மையாகும். சி.வியின் ‘வீடற்றவன்’ என்ற நாவல் அக்காலக்கட்டத்தில் மலையகத்தில் இயங்கிவந்த மக்கள் நலன் சார்ந்த இயக்கங்களைக் குறிக்கவில்லை. பாரம்பரிய தொழிற்சங்க அமைப்பினையே சித்தரித்துக் காட்டுகின்றது. அவ்வகையில் அக்காலப் பின்னணியில் ஒரு போக்கினை எடுத்துக் காட்டுகின்ற இந்நாவல் அதன் மறுபக்கத்தை காட்டத் தவறிவிடுகின்றது. பாரம்பரிய அமைப்புகளுக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும் இடையிலான முரண்பாட்டை யோ. பெனடிக் பாலனின் சொந்தகாரன் என்ற நாவல் சித்தரித்து காணப்படுகின்றது . இருப்பினும் இந்நாவல் யதார்த்த சிதைவினை கொண்டு காணப்படுவதால் அம்முயற்சி முழுமையடையவில்லை எனலாம்.



எதிர் காலத்தில் சி.வி.யின் சகல படைப்புகளையும் உள்ளடக்கிய அடக்கத் தொகுப்பொன்று வெளிவரவேண்டியது அவசியமாகும். அவ்வாறே சி.வி. பதித்த சமூகத் தடம் குறித்து பன்முக ஆய்வுகள் வெளிவரவேண்டியது காலத்தின் தேவையாகும்.



No comments:

Post a Comment